இனவாத நாடாகவே அடையாளப்படுத்த முடியும்

02.01.2021 10:16:37

 

சிங்களவர்களைத் தவிர ஏனைய இன மக்களை சமமான நிலையில் கருத முடியவில்லையென்றால், இந்த நாட்டை இனவாத நாடு என்றே அடையாளப்படுத்த முடியும் என  நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

மாகாண சபை முறைமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் கூறியுள்ளதாவது, “பௌத்த பிக்குகள் மாகாண சபை முறைமைக்கு எதிராகக் கொண்டுள்ள நிலைப்பாடும் எனது நிலைப்பாடும் முற்றிலும் வேறுபாடுள்ளது.

மாகாண சபை முறைமையில் ஆரம்பத்தில் எதிர்பார்த்த நோக்கம் நிறைவேறவில்லை. மாகாண சபை முறைமைக்கு அப்பால் சென்ற அதிகார பரவலாக்கலை கொண்ட வேலைத்திட்டத்திற்கு செல்ல வேண்டுமென்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

எனவே மாகாண சபைக்கு அப்பால் செல்ல வேண்டுமேயன்றி மாகாண சபை முறைமையை ஒழிப்பை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே நானும் அதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றேன்.

மேலும்  நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் என அனைத்து இன மக்களுக்கும் சம உரிமையுள்ளது. அதாவது, சிங்களவர்களைத் தவிர ஏனைய இன மக்களை சமமான நிலையில் கருத முடியவில்லையென்றால், இலங்கையை இனவாத நாடு என்றே அடையாளப்படுத்த முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.v