மியன்மார் இராணுவத்தின் உத்தியோகபூர்வமாக முகப்புத்தகம் முடக்கப்பட்டது

22.02.2021 08:15:00

 

மியன்மார் இராணுவத்தின் அதிகாரப்பூர்வ முகப்புத்தக பக்கமான டாட்மேடவ் முகப்புத்தகம் வரம்புகளை மீறியதற்காக முடக்கப்பட்டுள்ளது.

மியன்மாரில் கடந்த தேர்தலில் ஆங் சாங் சூகியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

எனினும் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக அந்நாட்டு இராணுவம் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்ததுடன், புதிய அரசை ஏற்கவும் இராணுவம் மறுப்பு தெரிவித்து வந்தது.

இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆங் சாங் சூகி தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்த இராணுவம் பொறுப்பை கைப்பற்றிக் கொண்டது. அத்துடன் ஆங் சாங் சூகி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களையும் இராணுவம் வீட்டுச் சிறையில் வைத்தது.

இதையடுத்து மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராகப் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இராணுவம் விதித்துள்ள தடையை மீறி இந்தப் போராட்டங்கள் நடைபெற்று வருவதால், போராட்டத்தை ஒடுக்க அடக்கு முறையை இராணுவம் கையாண்டு வருகிறது.

கடந்த 20 நாட்களாக மியன்மாரில் ஜனநாயக ஆதரவாளர்கள் யாங்கூன் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போராட்டப் பேரணிகளை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து அங்கு தற்காலிகமாக இணைய சேவை முடக்கப்பட்டது.

அத்தோடு, காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.

இராணுவத்தினரின் இந்த அடக்குமுறை நடவடிக்கைக்கு உலகம் முழுவதும் இணையத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

முகப்புத்தகத் தளம் மியன்மார் நாட்டில் தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்த நிலையில்,  மீண்டும் இயங்கி வருகிறது.

போராட்டக்காரர்கள் பலர் போராட்டங்கள் குறித்த புகைப்படங்கள் தகவல்களை  முகப்புத்தக பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

போராட்டத்தின் உச்சகட்டமாக கலவரத்தில் ஈடுபட்ட இரு போராட்டக்காரர்கள் இராணுவத்தினரால் முன்னதாக சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனையடுத்து இந்தப் போராட்டம் மேலும் தீவிரம் அடைந்துள்ளது.

இந்த நிலையில், மியன்மார் இராணுவத்தின் அதிகாரப்பூர்வ முகப்புத்தக பக்கமான டாட்மேடவ், முகப்புத்தக வரம்புகளை மீறியதற்காக முடக்கப்பட்டுள்ளது.

பலமுறை முகப்புத்தகத்தின் வரம்புகளை இந்த இராணுவ பக்கம் மீறி வந்ததால் தற்போது முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.