ஒலிம்பிக் போட்டிகளை இரத்து செய்யுமாறு கோரிக்கை !

19.05.2021 12:08:43

ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை இரத்து செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டோக்கியோ மருத்துவர்கள் சங்கம் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஏற்கனவே ஜப்பானிலுள்ள மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளைச் சமாளிக்கத் திணறி வருவதனை குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த சங்கத்தில் சுமார் 6,000 மருத்துவர்கள் உறுப்பினர்களாக உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போது டோக்கியோவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. இந்தச் சூழலில் அங்கு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது சக்திக்கு மீறியது எனவும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஏற்பாட்டுக் குழுவினர் சர்வதேச ஒலிம்பிக் குழுவிடம் நிலவரத்தை எடுத்துக்கூறி போட்டிகளை இரத்து செய்ய வேண்டும் என ஜப்பான் பிரதமரிடம் குறித்த சங்கம் கோரியுள்ளது.

டோக்கியோவில் எதிர்வரும் ஜூலை மாதம் 23ஆம் திகதி ஒலிம்பிக் போட்டிகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடாத்த திட்டமிடப்பட்ட குறித்த போட்டிகள் கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டது என்பதுக் குறிப்பிடத்தக்கது.