தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 12 ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்ன? மார்தட்டும் பிரதமர் மஹிந்த

12.06.2021 09:33:12

நாட்டில் யுத்தம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது பயங்கரவாத செயற்பாட்டில் சிறுவர்களை அதிகமாக ஈடுபடுத்தியதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அதற்கு 12 ஆண்டுகளுக்கு முன்னர் நாம் முற்றுப்புள்ளி வைத்தமையினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண பிள்ளைகளுக்கான அனைத்து உரிமைகளையும் அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.

உலகளாவிய ரீதியில் குழந்தை தொழிலாளர்களை இல்லாதொழிப்பதற்கு சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை உலக மக்களை அணிதிரட்டி வரும் நிலையில், குழந்தை தொழிலாளர்களை இல்லாதொழிப்பதற்கு சாதகமான பங்கு வகித்துள்ள இலங்கையின் பிரதமர் என்ற வகையில் இன்று கடைப்பிடிக்கப்படும் ´உலக தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை´ முன்னிட்டு செய்தியொன்றை வெளியிடுவதில் பெரும் மகிழ்ச்சியடைவதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த செய்திக் குறி்பபில்,

´குழந்தை தொழிலாளர்களை இல்லாதொழிக்க – இப்போதே செயற்படுங்கள்´ எனும் தொனிப்பொருளின் கீழ் 2021ஆம் ஆண்டை குழந்தை தொழிலாளர்களை இல்லாதொழிக்கும் சர்வதேச ஆண்டாக பெயரிடுவதற்கு இன்று முழு உலகமும் அணிதிரண்டு வருகிறது என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகின்றேன்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் உலகளாவிய நிலைத்தன்மை இலக்காக 2025ஆம் ஆண்டளவில் சிறுவர் தொழிலாளர்களை உலகில் இல்லாதொழிக்கும் இலக்கை கொண்ட வேலைத்திட்டம் ஆரம்பித்துள்ளது.

குழந்தைகளின் எதிர்காலத்தை ஒரு சிறந்த பாதையில் கொண்டு வருவதற்கு கடந்த காலத்தை அர்ப்பணித்த நாம் இன்றும் அதற்காக இன்னும் கடுமையாக உழைத்து வருகிறோம் என்பதை புதிதாக கூறவேண்டியதில்லை.

ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் குழந்தை தொழிலாளர்களை இல்லாதொழிப்பதற்கு இதுவரை முன்னெடுத்துள்ள முக்கியமான தீர்மானங்கள் காரணமாக மிக விரைவாக உலக நிலைத்தன்மை இலக்கை பூர்த்தி செய்து இலங்கையில் சிறுவர் தொழிலாளர்களை இல்லாதொழிக்க முடியும் என்பது எனது நம்பிக்கை.

ஆபத்தான வேலைகளில் சிறுவர்களை ஈடுபடுத்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் சிறுவர்களை ஈடுபடுத்துவதை தடுப்பதற்கு ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் பல சட்டங்களில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளோம்.

அதற்கமைய சிறுவர் தொழிலாளர்கள் மட்டுமின்றி, சிறுவர்களுக்கு எதிராக நடைபெறும் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கு சர்வதேச மரபுகள் மற்றும் கடமைகளுக்கு இணங்க நாம் ஒரு நாடு என்ற ரீதியில் செயற்பட்டு வருகின்றோம்.

தற்போதைய தலைமுறையை பற்றி மாத்திரமன்றி எதிர்கால சந்ததியினரை பற்றியும் சிந்தித்தே இன்று நாம் சிறுவர்கள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

அதனால் சிறுவர் தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி, சிறுவர்களுக்கு நிகழும் அனைத்து துஷ்பிரயோகங்கள் மற்றும் குற்றங்களை தடுக்க அதற்கு எதிராக குரல்கொடுக்க ஒருபோதும் தயங்க வேண்டாம் என இலங்கையின் அன்பான மக்களிடம் நான் தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்.