முல்லைத்தீவு துணுக்காய் , மாந்தை கிழக்கு மக்களிற்கு அவசர அறிவித்தல் !

02.05.2021 10:51:39

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பகுதியில் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டுள்ள நிலையில் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச மக்களுக்கான அவசர அறிவித்தல் ஒன்றை மல்லாவி மற்றும் மாந்தை கிழக்கு சுகாதார வைத்திய அதிகார பணிமனை விடுத்துள்ளது இதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது- எமது நாட்டில் கொரோனா தற்சமயம் வேகமாக பரவுகின்றமை யாவரும் அறிந்த விடயம்.

தற்போது எமது பிரதேசத்திலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர், எனவே சகல விழாக்கள், நிகழ்வுகள் ஒன்று கூடல்கள்,தனியார் வகுப்புகள் மற்றும் சமய ஆராதனைகளை உடனடியாக நிறுத்துவதுடன் சுகாதார நடைமுறைகளை சரியாக கடைப்பிடிக்குமாறும் தவறியவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி வைத்தியசாலையில் பணியாற்றும் கொல்லவிளாங்குளம் பகுதியை சேர்ந்த 47 வயதுடைய ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு கொழும்பில் மேசன் வேலைக்கு சென்று திரும்பிய ஆலங்குளம் பகுதியை சேர்ந்த 45 வயதுடைய பொதுமகன் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த அவசர அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.