கோட்டாபயவின் ஆட்சியில் மனிதவுரிமை நிலைமைகள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ள கண்காணிப்பகம்!

14.01.2021 09:33:34

நாட்டின் மனித உரிமை நிலைமைகள் குறித்து மனித உரிமைக் கண்காணிப்பகம் கடுயைமான அதிருப்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் பாரதூரமான வகையில் மோசமடைந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது.

2021ம் ஆண்டுக்கான மனித உரிமை நிலைமைகள் குறித்த சர்வதேச அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், குற்றச் செயல்களில் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்கள் தொடர்பில் அரசாங்க படைத்தரப்பு தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வரும் நிலையை அவதானிக்க முடிகின்றது என தெரிவித்துள்ளது.

அரசியல் அமைப்பு திருத்தங்களின் மூலம் நீதிமன்றின் சுயாதீனத்தன்மைக்கு குந்தக நிலைமை ஏற்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த அரசாங்கங்களினால் மனித உரிமை நிலைமைகளில் மேற்கொண்ட மேம்படுத்தல்களை ராஜபக்ச அரசாங்கம் மீண்டும் பின் நோக்கி நகர்த்தியுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென் ஆசிய பிராந்திய பணி;ப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

போரின் பின்னரான நல்லிணக்கங்கள் மிகவும் சொற்ப அளவிலே மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் அந்த நிலைமைகளும் மோசமடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.