எவர்கிவன் பிரமாண்ட கப்பல் மீட்பு- சூயஸ் கால்வாயில் போக்குவரத்து முழுமையாக சீரடைந்தது.

04.04.2021 10:58:45

நீர்வழிப் பாதை முடக்கப்பட்டதால் ஒவ்வொரு நாளும் 12 முதல் 15 மில்லியன் அமெரிக்க டாலர் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டதாக சூயஸ் கால்வாய் ஆணையம் தெரிவித்துள்ளது.

உலகின் கடல் வழித்தடத்தின் முக்கிய பாதையான எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாயில், கடந்த மாதம் 23-ந் தேதி ‘எவர் கிவன்’ என்ற பிரமாண்ட சரக்கு கப்பல் குறுக்கே சிக்கியது.

கால்வாயை கடந்து சென்றபோது பலத்த காற்றால் கப்பல் திசைமாறி இருபுறமும் தரை தட்டியது. ஆனால் சூயஸ் கால்வாயில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

ஏராளமான சரக்கு கப்பல்கள் நடுவழியில் காத்து கிடந்தன. கால்வாய் குறுக்கே சிக்கிய 2.20 லட்சம் டன் எடை கொண்ட எவர் கிவன் கப்பலை மீட்கும் பணியை தீவிரப்படுத்தினர்

தரை தட்டிய பகுதியில் மணல்களை அகற்றியும், இழுவை கப்பல்கள் மூலமும் மீட்பு பணி நடந்தது. 6 நாட்களுக்கு பிறகு எவர் கிவன் கப்பல் மீட்கப்பட்டது. பலத்த காற்று, ராட்சத அலை மற்றும் மீட்பு பணி காரணமாக கப்பல் மிதக்க தொடங்கியது.

பின்னர் கப்பலை இழுவை கப்பலகள் இழுத்து சென்றன. இதையடுத்து சூயஸ் கால்வாயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது. கால்வாயை கடக்க காத்துக் கொண்டிருந்த சரக்கு கப்பல்கள் ஒவ்வொன்றாக செல்ல அனுமதிக்கப்பட்டன.

இதையடுத்து கச்சா எண்ணை, மருந்துகள் உள்ளிட்ட சரக்கு கப்பல்கள் புறப்பட்டு சென்றன.

இந்த நிலையில் சூயஸ் கால்வாயில் தடைப்பட்டு இருந்த போக்குவரத்து முழுமையாக சீரடைந்தது. இதுகுறித்து சூயஸ் கால்வாய் ஆணைய தலைவர் ஒசாமா ராபி கூறியதாவது:-

சூயஸ் கால்வாயை கடக்க காத்திருந்த அனைத்து கப்பல்களும் புறப்பட்டு சென்றன. எவர்கிவன் பிரமாண்ட கப்பலை மீண்டும் மிதக்க வைக்கும் பணியில் ஈடுபட்டவர்களில் 99 சதவீதம் பேர் எகிப்தியர்கள் என்றார்.

சூயஸ் கால்வாய் எகிப்துக்கு பொருளாதார ரீதியாக மிகவும் முக்கியமானது. அந்த நீர்வழி பாதை முடக்கப்பட்டதால் ஒவ்வொரு நாளும் 12 முதல் 15 மில்லியன் அமெரிக்க டாலர் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டது, என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 19 ஆயிரம் கப்பல்கள் சூயஸ் கால்வாயை கடந்து சென்றன என்பது குறிப்பிடத்தக்கது.