இந்தியக் கிரிக்கெட் அணி வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியல் வெளியீடு !

16.04.2021 10:40:45

இந்தியக் கிரிக்கெட் அணி வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வெளியிட்டுள்ளது.

ஏ பிளஸ் பிரிவில் இடம் பிடித்துள்ளவர்களுக்கு 7 கோடி ரூபாயும், ஏ பிரிவில் இடம் பிடித்துள்ளவர்களுக்கு 5 கோடி ரூபாயும், பி பிரிவில் இடம் பிடித்துள்ளவர்களுக்கு 3 கோடி ரூபாயும், சி பிரிவில் இடம் பிடித்துள்ளவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளமாகவும் வழங்கப்படும்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 2020 முதல் 2021 செப்டம்பர் மாதம் வரையான இந்த ஒப்பந்தத்தில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்படி, வொஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ் மற்றும் அக்ஸர் பட்டேல் ஆகியோர் 2020-2021ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் இடம்பிடித்துள்ளனர்.

2019-2020ஆம் ஆண்டு பி பிரிவில் இடம் பிடித்திருந்த ஹர்திக் பாண்ட்யா, தற்போது ஏ பிரிவிற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளார்.

அத்துடன் முன்னதாக ஏ பிரிவில் இடம் பிடித்திருந்த புவனேஷ்வர் குமார், தற்போது பி பிரிவிற்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.

இதேபோல சாஹர் சி பிரிவிற்கு தள்ளப்பட்ட நிலையில், கேதர் ஜாதவ், மணிஷ் பாண்டே ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை.

ஏ பிளஸ் பிரிவில் விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

ஏ பிரிவில் அஷ்வின், ஜடேஜா, புஜாரா, ரஹானே, தவான், கே.எல் ராகுல், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

பி பிரிவில் விருத்திமான் சஹா, உமேஷ் யாதவ், ஷர்துல் தாகூர், மயங்க் அகர்வால் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

சி பிரிவில் குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, தீபக் சாஹர், சுப்மான் கில், ஹனுமா விஹாரி, ஷ்ரேயாஸ் அய்யர், வொஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.