தான தர்மங்களை செய்வதே மனநிம்மதியை தரும்

08.06.2021 10:49:05


மரணம் எப்போதும் எம்மை சந்திக்கலாம். அதற்கு முன்னர் தான தர்மங்களை செய்வதே எங்களுக்கு மனநிம்மதியை தரும் என அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவரும் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம்.சபீஸ் தெரிவித்துள்ளார்.

அம்பாறை- அக்கரைப்பற்றிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் எஸ்.எம்.சபீஸ் மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு பல்வேறு சிக்கல்களை தோற்றுவித்துள்ளது.

இதில் மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுக்க ஆரம்பித்துள்ளது பட்டினியும் பசிக்கொடுமையும் ஆகும்.

ஆகவே, இதனை இல்லாதொழிக்க ‘அயலவருக்கு உதவுவோம்’ எனும் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளோம்.

அதாவது உங்களுக்கு அருகில் வசிப்போரின் நிலையறிந்து, உங்களினால் முடிந்த உதவிகளை செய்வதன் ஊடாக பட்டினி நிலையை இல்லாதொழிக்கலாம்.

மரணம் எப்போதும் எம்மை சந்திக்கலாம். அதற்கு முன்னர் தான தர்மங்களை செய்வது எமக்கு மனநிம்மதியை தரும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.