கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையில் அத்தியாவசியமற்ற பயணங்களுக்கான தடை

20.02.2021 11:36:46

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையில் அத்தியாவசியமற்ற பயணங்களுக்கான தடை எதிர்வரும் மார்ச் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கனடா, அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ நாடுகளுக்கு இடையிலான அத்தியாவசியமற்ற பயணத் தடை நாளை(ஞாயிற்றுக்கிழமை) வரை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தொற்றுநோய் காரணமாக மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

11-வது தடவையாகவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு இடையிலான எல்லை மூடப்பட்டு முழுதாக ஒரு வருடம் ஆகவுள்ளது.

அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையேயான வர்த்தகம் போன்ற அனைத்து அத்தியாவசிய பயணங்களும் வழக்கம் போன்று தொடர அனுமதிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், கனடா கடந்த 15ஆம் திகதி முதல் அனைத்து பயணிகளுக்கும் புதிய, கடுமையான சோதனை மற்றும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.