ஐ.பி.எல். தொடர் கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த நாளை ஆரம்பம் !

08.04.2021 09:43:26

 

உலகெங்கிலும் உள்ள பல கோடி கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஐ.பி.எல். ரி-20 லீக் தொடர், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.

ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின் 14ஆவது அத்தியாயத்திற்கான தயார் படுத்தல்கள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடர், எதிர்வரும் 9ஆம் திகதி முதல் மே 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

தொடரின் முதல் லீக் போட்டியில், நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதவுள்ளன.

சென்னை- சிதம்பரம் மைதானத்தில் நாளை உள்ளூர் நேரப்படி இரவு 7.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இப்போட்டியில் மும்பை அணிக்கு ரோஹித் சர்மாவும், பெங்களூர் அணிக்கு விராட் கோஹ்லியும் தலைமை தாங்கவுள்ளனர்.

இரு அணிகளும் முன்னதாக 27 முறை மோதியுள்ளன. இதில் மும்பை அணி 17 போட்டிகளிலும் பெங்களூர் அணி 10 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.