திடீரென அத்துமீறி நுழைந்த 16 சீன விமானங்கள் - ஏற்பட்டுள்ள பதற்றம்

03.06.2021 09:00:00

 

தென் சீன கடல் பகுதியில் அமைந்துள்ள மலேசிய நாட்டின் வான் எல்லைக்குள் சீன விமானங்கள் திடீரென அத்துமீறி நுழைந்துள்ளதையடுத்து பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 31-ம் திகதி மலேசிய வான் எல்லைக்குள் சீன விமானப்படைக்கு சொந்தமான 16 விமானங்கள் அத்துமீறி நுழைந்தன. இதையடுத்து, மலேசிய விமானப்படை விமானங்கள் உடனடியாக சீன விமானங்கள் சுற்றித்திரிந்த பகுதிக்கு அனுப்பப்பட்டன.

ஆனால், மலேசிய விமானப்படை விமானங்கள் வருவதற்குள் மலேசிய வான் எல்லையில் இருந்து சீன விமானங்கள் விலகி சென்றுவிட்டன. இந்த விவகாரம் குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் மலேசியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

தங்கள் விமானங்கள் எந்த நாட்டின் வான் எல்லைப்பரப்பிற்குள் விதிகளை மீறி நுழையவில்லை எனவும், சர்வதேச சட்டவிதிகள் படி சர்வதேச வான் எல்லைபகுதியிலேயே சென்றதாகவும், இது வழக்கமான பயிற்சி தான் எனவும் சீனா தெரிவித்துள்ளது.