இலங்கையரின் இத்தாலியில் இருந்து கொண்டுவரப்பட்ட சடலம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை

19.04.2021 09:45:59

இத்தாலியில் இருந்து, துப்பாக்கிச் சூட்டு காயங்களுக்கு உள்ளான 32 வயதான இலங்கையரின் சடலம், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டுவரப்பட்டுள்ளது.

கம்பாஹா- நெடுங்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த இவர், இத்தாலியின் ஏப்ரிலியா நகரில் பணிபுரிந்து வந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப்பொலிஸ்மா அதிபரமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இத்தாலியில் இடம்பெற்ற சம்பவமொன்றிலேயே அவர் இறந்திருக்க கூடுமென அஜித் ரோஹண மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நபரின் உடல், நேற்று மாலை துருக்கி விமானத்தின் ஊடாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் அஜித் ரோஹண கூறியுள்ளார்.

இந்நிலையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளதுடன் நீதிமன்றத்திற்கு அறிவித்த பின்னர் பிரேத பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.