பரபரப்பான இரண்டாவது ரி-20: போட்டியில் ஆஸியை சுருட்டியது நியூஸிலாந்து !

25.02.2021 09:57:33

அவுஸ்ரேலியா அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 4 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

டுனெடின் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி. முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மார்டின் கப்டில் 97 ஓட்டங்களையும் கேன் வில்லியம்சன் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்ரேலிய அணியின் பந்துவீச்சில், கேன் ரிச்சட்சன் 3 விக்கெட்டுகளையும் டேனில் சேம்ஸ், ஜெய் ரிச்சட்சன் மற்றும் ஆடம் செம்பா ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 220 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்ரேலியா அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 215 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 4 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக மார்கஸ் ஸ்டொயினிஸ் 78 ஓட்டங்களையும் ஜோஷ் பிலிப்பே 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சில், மிட்செல் சான்ட்னர் 4 விக்கெட்டுகளையும் ஜேம்ஸ் நீஷம் 2 விக்கெட்டுகளையும் டிம் சவுத்தீ மற்றும் இஷ் சோதி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 50 பந்துகளில் 8 சிக்ஸர்கள் 6 பவுண்ரிகள் அடங்களாக 97 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட மார்டின் கப்டில் தெரிவுசெய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவது ரி-20 போட்டி, எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி வெலிங்டனில் நடைபெறவுள்ளது.