அரபிக் கடலில் நிலவும் அதிதீவிரப் புயல் செவ்வாய்க்கிழமை குஜராத்தைக் கடக்கும்

16.05.2021 10:39:46

 

அரபிக் கடலில் நிலவும் அதிதீவிரப் புயல் செவ்வாய்க்கிழமை அதிகாலை குஜராத்தின் போர்பந்தர் – மகுவா இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை ஐந்தரை மணி நிலைவரப்படி அதிதீவிரப் புயல் கோவாவுக்கு மேற்கு தென்மேற்கே 130 கிலோமீட்டர் தொலைவிலும் மும்பைக்குத் தெற்கே 450 கிலோமீட்டர் தொலைவிலும் நிலவியதாகக் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று வடக்கு வடமேற்குத் திசையில் நகர்ந்து நாளை மாலை குஜராத் கடற்பகுதியை அடையும் என்றும் செவ்வாய் அதிகாலையில் போர்பந்தர் – மகுவா இடையே கரையைக் கடக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.

புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 175 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

புயலின் காரணமாகக் கேரளத்திலும் கர்நாடகத்தின் கடலோர மலையோர மாவட்டங்களிலும் கோவாவிலும் பெரும்பாலான இடங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யக் கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.