இலங்கையில் தயார் நிலையில் சிறப்பு விமானங்களும் ஹெலிகொப்டர்களும் !

24.05.2021 11:43:55

 

இலங்கையில் தற்போது நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக திடீர் அனர்த்தங்கள் ஏற்படுமாயின், அந்த நிலைமையை எதிர்கொள்ள விமானப்படையின் சிறப்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அனர்த்த நிலைமையின் போதான மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு என 9 ஹெலிகொப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்ப்ட்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் குறூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்தார்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் முன் வைத்துள்ள கோரிக்கைக்கு அமைய, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன இதற்கான ஆலோசனைகளை வழங்கியதாகவும், அதன் பிரகாரமே ஹெலிகொப்டர்களும், சிறப்பு மீட்பு பயிற்சி பெற்ற குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக குறூப் கெப்டன் துஷான் விஜேசிங்க கூறினார்.

இந்நிலையில் அனர்த்த நிலைமைகள் தொடர்பில் ஆகாய மார்க்கமாக மேற்பார்வைகளை முன்னெடுக்க பீச் கிராப்ட் 200 ரக விமானங்களை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக இரத்மலானை, ஹிங்குரான்கொடை, அனுராதபுரம் மற்றும் பலாலி விமானப்படை தளங்களில் 9 ஹெலிகொப்டர்கள், சிறப்பு பயிற்சி பெற்ற குழுவினருடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக குறூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.