விறுவிறுப்பான போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி !

15.04.2021 10:42:41

ஐ.பி.எல். ரி-20 தொடரின் ஆறாவது லீக் போட்டியில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 6 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

சென்னை மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சன்ரைசஸ் ஹைதராபாத் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, க்ளென் மேக்ஸ்வெல் 59 ஓட்டங்களையும் விராட் கோஹ்லி 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஹைதராபாத் அணியின் பந்துவீச்சில், ஜேஸன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும் ரஷித் கான் 2 விக்கெட்டுகளையும் புவனேஸ்வர் குமார், நதிம் மற்றும் நடராஜன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 150 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் பெங்களூர் அணி, 6 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டேவிட் வோர்னர் 54 ஓட்டங்களையும் மணிஷ் பாண்டே 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பெங்களூர் அணியின் பந்துவீச்சில், சபாஸ் அஹமட் 3 விக்கெட்டுகளையும் ஹர்சால் பட்டேல் மற்றும் மொஹமட் சிராஜ் 2 விக்கெட்டுகளையும் கெய்ல் ஜேமீசன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 41 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 5 பவுண்ரிகள் அடங்களாக 59 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட க்ளென் மேக்ஸ்வெல் தெரிவுசெய்யப்பட்டார்.