தடுப்பூசி மருந்துகள் மீதான ஜி.எஸ்.டி வரியை இரத்து செய்ய வேண்டும் – மு.க.ஸ்டாலின்

13.05.2021 12:26:42

தடுப்பூசி மருந்துகள் மீதான ஜி.எஸ்.டி வரியை குறிப்பிட்ட காலத்திற்கு இரத்து செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘கொரோனா தொற்றால் அனைத்து மாநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தொற்றை கட்டுப்படுத்த தேவையான தடுப்பூசிகளையும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகளையும் மாநில அரசுகளே கொள்முதல் செய்து வருகின்றன.

இதனை கருத்திற் கொண்டு ஜி.எஸ்.டி கவுன்சிலோடு கலந்து ஆலோசனை செய்து இந்த பொருட்கள் மீதான ஜி.எஸ்.டியை குறிப்பிட்ட காலத்திற்கு பூஜிய சதவீதம் என நிர்ணயம் செய்ய வேண்டும்.

பொருளாதார வளர்ச்சி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மாநில அரசுகளின் வரி வருவாய் வளர்ச்சி பெருளவில் குறைந்துள்ளதால், அதனை ஈடு செய்ய நிலுவையுள்ள ஜி.எஸ்.டி இழப்பீட்டு தொகைகளையும், மாநில நுகர்பொருள் கழகங்களுக்கு வழங்கப்பட வேண்டியுள்ள அரிசி மானியத் தொகையையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.

பெற்றோல் மற்றும் டீசல் மீதான கூடுதல் மேல் வரி விதிப்பால் மத்திய அரசுக்கு கிடைத்துள்ள வருவாய் மாநில அரசுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படாத நிலையில், கொரோனா தொற்றால் மாநில அரசுகளுக்கு ஏற்பட்டுள்ள நிதி இழப்பீட்டை ஈடு செய்ய சிறப்புநிதி உதவி அளிக்கப்பட வேண்டும்.

இந்த காலத்தில் ஏற்பட்டுள்ள கூடுதல் செலவினங்களை மேற்கொள்ளத் தேவைப்படும் நிதியை திரட்டுவதற்காக, அனுமதிக்கப்பட்டுள்ள கடன் வாங்கும் அளவை, மாநிலத்தின் உற்பத்தி மதிப்பில் மூன்று சதவீதம் என்ற அளவில் இருந்து மேலும் ஒரு சதவீதம் உயர்த்த வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.