காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை இலங்கை கடற்கரையை நெருங்கும்!

31.01.2023 22:34:38

தென் தமிழகத்தில் நாளை(புதன்கிழமை), நாளை மறுதினம் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை இலங்கை கடற்கரையை நெருங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நாளை அதிகாலை தென்கிழக்கு இலங்கை கடற்பகுதியை காற்றுழத்த தாழ்வு மண்டலம் சென்றடையும்.

திருகோணமலைக்கு தென் மேற்கே 455 கி.மீ. தொலைவிலும், காரைக்காலுக்கு தென்மேற்கே 680 கி.மீ. தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவிவருகிறது.

தென் கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்ததாழ்வு மண்டலம் வட மேற்கு திசையில் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரையை நெருங்கும் எனவும், அதன் பின்னர் தெற்கு இலங்கை கடற்கரையை நோக்கி நகரும் எனவும் எதிர்பார்க்கபடுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் நாளை, மற்றும் நாளை மறுதினம் என 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தென் தமிழகத்தில் கனமழை பெய்ய கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாளைய தினம் தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

நாளை முதல் 3ஆம் திகதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு  வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.