அழுத்தத்தை குறைக்க தேசிய மனித உரிமைத் திட்டம் வகுக்க வேண்டும்!

22.01.2021 10:11:06

அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தால் இலங்கையின் எதிர்கால அழுத்தத்தைக் குறைக்க உடனடியாக தேசிய மனித உரிமைத் திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்று பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவா வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான மனித உரிமை குற்றச்சாட்டுகளைத் தொடர அமெரிக்கா தயாராக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர், முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பின் நிர்வாகம் முழுமையாக செயலிழந்துள்ளது.

விலகிச் சென்ற அனைத்து உலக அமைப்புகளும் மீண்டும் அமெரிக்காவுடன் இணைந்துகொண்டன. பெப்ரவரி மாதத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கூட்டத்தொடர் ஆரம்பமாகும். ட்ரம்ப ஆட்சியில் அமெரிக்க பிரதிநிதிகள் அங்கிருந்து நீங்கியிருந்தனர்.

தற்போது, ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் இணைந்து 2015ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட மனித உரிமை பிரேரணையை மீண்டும் முன்கொண்டு செல்வார்கள். அவர்களுக்கு பின்னணியில் உள்ள அணியினரை பார்க்கும்போது இது தெளிவாகின்றது.

எனவே, இலங்கையில் முடிந்தால் உடனடியாக தேசிய மனித உரிமைத் திட்டமொன்று வகுக்கப்பட வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.