ஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்!

24.02.2021 10:45:32

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வின்போது இலங்கை சார்பாகப் பேசுவதற்கு பதினெட்டு நாடுகள் உறுதியளித்துள்ளதாக உயர் வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்த நாடுகளின் உயர் மட்டப் பிரிவானது, இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஆதரித்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும். தகவல்களின்படி, இந்த 18 நாடுகளில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் உறுப்பினர்களைக் கொண்ட நாடுகளும் உள்ளதுடன் அவை இலங்கைக்கு ஆதரவாக இருக்கும்.

யுத்த காலத்தில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் பிரச்சினைகள் குறித்து இலங்கை மீது தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான முக்கிய நாடுகளின் குழுவினரின் முயற்சியைத் தடுப்பதற்கு, தமக்கு நட்பான நாடுகளின் ஆதரவைக் கோருவதற்கு இலங்கை ஒரு தீவிரமான சர்வதேச பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது.

ஐ.நா. தீர்மானத்தின் முதல் வரைவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது, 2015இல் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திற்கு ஒத்ததாக இருப்பதாக இலங்கை நம்புகிறது. 2019ல் பதவியேற்ற தற்போதைய அரசாங்கம் கடந்த ஆண்டு மார்ச்சில் இந்தத் தீர்மானத்தின் இணை அனுசரணையிலிருந்து விலகியது.

நல்லிணக்கத்தின் அலுவலகம், இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை குறித்த அதன் கண்காணிப்பு மற்றும் அறிக்கையை மேம்படுத்தவும், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான முன்னேற்றம் உள்ளிட்டவற்றை மேம்படுத்தவும், மனித உரிமைகள் பேரவையில் அதன் நாற்பத்தொன்பதாவது அமர்வில் எழுதப்பட்ட புதுப்பித்த விடயங்களை உள்ளடக்கியும் முதல் வரைவு காணப்படுகிறது.

இதேவேளை, இலங்கை குறித்த தனது நிலைப்பாட்டை இந்தியா இதுவரை தெரிவிக்கவில்லை. இந்தியாவுடன் கூட்டாக கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கான முன்னைய அரசாங்கத்தின் உறுதிப்பாட்டில் இருந்து தற்போதைய அரசாங்கம் விலகியுள்ளமை தொடர்பாக இலங்கை – இந்தியா இடையே நெருடல்கள் உள்ளன.

மேலும், யாழ்ப்பாணத் தீவுகளில் மூன்று தீவுகளை மின் உற்பத்தித் திட்டத்துக்காகச் செயற்படுத்த சீன நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம் செய்துள்ளமை குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது. இந்தியாவின் தெற்கு கடலோரப் பாதுகாப்புக் கவலைகளை மேற்கோளிட்டு சீன நிறுவனம் இலங்கையின் வடக்கில் கால்பதிப்பதை இந்தியா எதிர்க்கிறது.

இதேவேளை, இந்தியாவின் இந்தத் தலையீட்டைக் கடுமையாக எதிர்க்கும் சீன நிறுவனம் கடந்த திங்களன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், சர்வதேச ரீதியிலான போட்டி மற்றும் ஏல செயன்முறை மூலம் இந்தத் திட்டத்தை வென்றதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது- Daily Mirror.

இதேவேளை, வடக்கின் யாழ்ப்பாணத் தீவுகளில் சீனாவின் ஆதிக்கம் இருக்கக் கூடாது என்பதையும் இந்தியா, ஈழத் தமிழருடன் இணைந்து செயற்படுவதன் மூலம் இந்தியாவின் தென்முனையை நிரந்தரமாகப் பாதுகாக்க முடியும் என்பதையும் வடக்கில் தமிழர் தரப்பு வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.