பொன்சேகா புலம்பெயர் சமூகத்துடன் இரகசிய ஒப்பந்தம் ?

05.05.2021 09:00:00

விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்ட சர்வதேச சமூகத்திற்கும், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பிக்கும் இடையே இரகசிய ஒப்பந்தம் இருந்தபடியினால்தான் கடந்த ஜனாதிபதி தேர்தலில் அவர் தமிழ்ப் பிரதேசங்களை வெற்றிகொண்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டினை நாடாளுமன்றத்தில் இன்று முற்பகலில் உரையாற்றியபோது அவர் முன்வைத்தார்.

அத்துடன் யாழ் – மிருசுவில் படுகொலை வழக்கில் விடுலையாக்கப்பட்ட சுனில் ரத்நாயக்கவின் விடுதலையை எதிர்க்கின்ற பொன்சேகா, ஏன் 12500 முன்னாள் போராளிகள் விடுவிக்கப்படுகையில் எதிர்ப்பு வெளியிடவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதேவேளை அமைச்சர் வீரசேகரவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாக சபையில் குறிப்பிட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இராணுவச் சீருடை போர்வையில் படுகொலை செய்திருந்தால் நிச்சயம் சரத் வீரசேகர, வசந்த கரன்னாகொட அல்லது சுனில் ரத்நாயக்க மாத்திரமல்ல, குற்றம் செய்த எவர் வேண்டுமானாலும் தூக்குத் தண்டனையே வழங்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.