பாரிஸ் வால்ட் டிஸ்னி பூங்கா திறப்பு மீண்டும் தள்ளிவைப்பு

19.01.2021 09:12:33

உருமாறிய கொரோனா வைரஸ் எதிரொலியால் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள வால்ட் டிஸ்னி பூங்கா திறப்பு ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய பொழுதுப்போக்கு பூங்கா வால்ட் டிஸ்னி  பூங்காக்கள் கலிபோர்னியா, புளோரிடா, பாரிஸ், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகிய இடங்களில் உள்ளது.

வழக்கமாக இந்த பூங்காக்களில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் வருகைபுரிவதுண்டு. மக்கள் கொண்டாடங்கள் மிகுந்து காணப்படும் இந்த வால்ட் டிஸ்னி பூங்கா கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் தொற்று காரணாமாக மூடப்பட்டிருந்தது.

குறிப்பாக, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள டிஸ்னி பூங்கா கடந்த ஆண்டு மார்ச் மாதம் 15-ம் தேதி மூடப்பட்டது. பின்னர் வைரஸ் பரவல் குறைந்ததையடுத்து ஜூன் 15-ம் தேதி திறக்கப்பட்டது. அதன் பின் வைரஸ் பரவல் அதிகரித்தையடுத்து மீண்டும் அக்டோபர் 30-ம் தேதி மூடப்பட்டது.

இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின்னர் பாரிஸ் டிஸ்னி பூங்கா வரும் பிப்ரவரி 13-ம் தேதி மீண்டும் திறக்கப்படுவதாக இருந்தது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.

ஆனால், தற்போது பரவி வரும் உருமாறிய கொரோனாவால் பிரான்ஸ் நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.


இதனால், பிப்ரவரி 13-ல் பூங்கா திறப்பு தடைபட்டு தாமதம் ஏற்பட்டுள்ளது. அதன்படி பாரிஸ் டிஸ்னி பூங்கா ஏப்ரல் மாதம் 2-ம் தேதி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவல் அதிகரித்தால் இந்த முடிவிலும் மாற்றம் ஏற்படலாம் என பாரிஸ் வால்ட் டிஸ்னி நிறுவனம் தெரிவித்துள்ளது.