மூன்று நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் இத்தாலிக்குள் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடை நீடிப்பு !

31.05.2021 12:34:07

 

இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் இத்தாலிக்குள் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலாவதியாக இருந்த இந்த நடவடிக்கை, தற்போது பேரழிவை ஏற்படுத்திவரும் இந்திய கொவிட் மாறுபாடு காரணமாக நீடிக்கப்பட்டுள்ளது. இத்தாலிய குடிமக்களுக்கு இந்த தடை பொருந்தாது.

கடந்த ஏப்ரல் மாத இறுதியில் அமுல்படுத்தப்பட்ட இந்த தடையானது, எதிர்வரும் ஜூன் 21ஆம் திகதி வரை நீடிக்கப்படுமென இத்தாலிய சுகாதார அமைச்சர் ராபர்டோ ஸ்பெரான்சா செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் பி.1.617 மாறுபாடு கடந்த ஆண்டு இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்டது மற்றும் சமீபத்திய வாரங்களில் தெற்காசிய நாடுகளைத் தாக்கிய பேரழிவு தரும் கொவிட்-19 அலைக்கு இதுவே காரணம்.

இந்த வாரம், உலக சுகாதார அமைப்பு, இந்த மாறுபாடு அதிகாரப்பூர்வமாக 53 பிரதேசங்களுக்கு பரவியுள்ளது என்றும், மற்ற ஏழு பகுதிகளுடன் அதிகாரப்பூர்வமற்ற ஆதாரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது.