தேர்தலை நடத்துவதற்கு ரணிலுக்கு அதிகாரம் இல்லை

19.03.2023 15:22:45

அரசியலமைப்பின் பிரகாரம் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இவ்வருடம் அதிபர் தேர்தலை நடத்துவதற்கு அதிகாரம் இல்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர் சந்திப்பொன்றில் இதனைத் தெரிவித்த அவர், அரசியலமைப்பின் 40 வது பிரிவின்படி, ஐந்தாண்டுகளின் முழு பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் அதிபர் தேர்தலை நடத்துவதற்கு அடுத்த அதிபருக்கு அதிகாரம் இல்லை எனக் கூறினார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

“அரசியலமைப்பின் 40 வது பிரிவின் விதிகளின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபருக்கு மட்டுமே அவர் இரண்டாவது தவணைக்கு போட்டியிட்டால், முழு பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு வருடம் முன்னதாக அதிபர் தேர்தலை நடத்த அதிகாரம் உள்ளது.

கோட்டாபய ராஜபக்ச இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகு அதிபர் தேர்தலை நடத்தியிருக்க முடியும்.

அடுத்த அதிபராக ரணில் விக்ரமசிங்கவுக்கு அத்தகைய அதிகாரம் இல்லை.

2024 நவம்பருக்குப் பின்னரே அதிபர் தேர்தலை நடத்துவதற்கு ரணிலுக்கு அதிகாரம் வழங்கப்படும்” - என்றார்.