இலங்கையை சீனா தாக்கினால் இலங்கைக்குள் இந்திய இராணுவம் களமிறக்கப்படும் !

31.03.2021 09:30:33

 

இலங்கையை சீனா எவ்வளவு பயமுறுத்தினாலும் இந்தியா அதன் பின்னணியில் எப்போதும் இருக்கும். ஏனெனில் இலங்கையை சீனா தாக்கினால் அது இந்தியாவிற்கு பேராபத்து என இந்தியாவின் மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கைக்கு பாதிப்பான சூழ்நிலைகள் ஏற்படும் பட்சத்தில் இலங்கைக்குள் இந்திய இராணுவம் களமிறங்கும் எனவும் இந்தியாவின் மூத்த இராணுவ கேணல் தர அதிகாரி, ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இராணுவ பிரசன்னம் அல்லது இராணுவ ரீதியான ஒரு நிலைப்பாடு இலங்கைக்குள் ஆழமாக இருக்கிறது. அதனால், எந்த நாடு அதற்குள் நுழைந்தாலும் எந்த பாதிப்பும் இல்லை என்று எடுத்துக் கொள்ளலாமா? என அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர்,

பாதிப்பு இல்லையெனக் கூறிவிட முடியாது. பாதிப்பு இருக்கும். ஆனால் அந்த பாதிப்பிற்கு இந்தியா உடனடியாக பதிலடி கொடுத்து தகர்க்க முடியும். இந்தியாவிடம் அத்தகைய வலிமை உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல் இந்தியாவின் மீது தாக்குதல் நடந்தால் அது இலங்கையின் மீதும் ஓரளவு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் எந்த நாடும் எப்போதும் வெளியுறவுச் செயற்பாட்டை ஒரே மாதிரி வைத்திருக்காது. அதேபோல் 80களில் இருந்த சூழ்நிலை தற்போது இல்லை. அப்போது பனிப் போர் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த சூழ்நிலையில், சோவியத் ஒன்றியமும், அமெரிக்காவும் எதிர் எதிராக நாடுகளைத் திரட்டி உலகப் பாதுகாப்பு சூழ்நிலையை நிர்ணயித்தன.

ஆனால் இப்போது அப்படி இல்லை. ஆகவே இப்போது இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்ப இந்தியா தனது கொள்கையை 20 வருடங்களாக மாற்றி வருகின்றது. இந்நிலையில் பழைய காங்கிரஸ் அரசியல் முற்றிலுமாக மாறி தற்போது வேறு மாதிரியான சூழல் உருவாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இலங்கைக்கு ஒரு போர் கால சூழ்நிலை அல்லது ஒரு பேராபத்து சூழ்நிலை ஏற்பட்டால், இலங்கை கேட்டுக் கொண்டால், கட்டாயம் இந்தியா தனது இராணுவத்தை அனுப்பும் எனவும் தெரிவித்துள்ளார்.