கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுப்பு..

05.06.2021 10:09:01

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் செயற்பாடு இன்று (சனிக்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது.

இன்று (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில், யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் இணைந்து குறித்த தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டை முன்னெடுத்தனர்.

ஊசி மருந்துகளுக்கு ஒவ்வாமை உடையவர்கள் மற்றும் வேறு ஆபத்துக்குரிய நோய் நிலைமை உடையவர்களை அவசர சிகிச்சைப் பிரிவுகளிலுள்ள வைத்தியசாலைகளுக்கு அழைத்து, கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

அதாவது கொவிட்-19 தடுப்பூசிகள் பெற்றுக்கொள்ள வருகை தந்தவர்கள் மருத்துவர்களினால் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் மருந்து ஏற்றப்படுகிறது.

மேலும் ஊர்காவற்றுறை, பருத்தித்துறை, சாவகச்சேரி, தெல்லிப்பழை, ஆகிய ஆதார வைத்தியசாலைகளில் இவ்வாறு தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.

அதிகளவானோர் தங்களுக்கான கொவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வைத்தியசாலைக்கு வருகை தந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.