கச்சதீவில் புத்தர் சிலை தொல்.திருமா நடவடிக்கை

28.03.2023 22:00:00

கச்சதீவில் மதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தில் புத்தர் சிலையை நிறுவிய சிங்கள இனவெறியர்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மான மனு அளித்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 

மதக்கலவரத்தை உருவாக்கும் முயற்சி

“சிங்கள இனவெறியர்கள் மதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தில் கச்சதீவில் புத்தர் சிலையை நிறுவியுள்ளனர். தற்போதுவரையில் அங்கே அந்தோனியார் ஆலயம் மட்டுமே இருந்தது, ஆண்டுதோறும் அங்கே ஓர் கிறித்தவ திருவிழா நடைபெற்று வருகிறது.

மத உரிமைகளை மீறும் செயலாகும்

கிறித்தவர்களை விரட்டியடிக்கும் நோக்கத்தில் சிங்கள இனவெறியர்கள் மாபெரும் புத்தர் சிலையை அங்கே நிறுவ திட்டமிட்டுள்ளனர். இது தமிழ்நாட்டு தமிழர்கள் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு எதிரான செயல் மட்டுமல்ல அவர்களின் மத உரிமைகளை மீறும் செயலாகும்.

இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். அச்சிலையை அங்கிருந்து அகற்றி மதநல்லிணக்கத்தை மீட்டெடுக்க இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டு நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மான மனு அளித்துள்ளேன்.