மூச்சுதிணறலால் அவதி... நடிகர் கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் ..

09.04.2021 11:05:04

மனித உரிமை காக்கும் கட்சியின் நிறுவனரான நடிகர் கார்த்திக்குக்கு, கடந்த மாதம் 21-ந் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மதுரை, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கார்த்திக் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரம் முடிந்து சென்னை திரும்பிய அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள கார்த்திக்குக்கு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தொற்று இல்லை என்று தெரியவந்த போதிலும் மூச்சுத்திணறல் சரியாகாமலேயே உள்ளது. இதை தொடர்ந்து டாக்டர்கள் கார்த்திக் உடல் நிலையை கண்காணித்து வருகிறார்கள்.