இலங்கை வரும் இந்தியக் கிரிக்கெட் அணி!

11.05.2021 12:07:28

வெள்ளைப் பந்து கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக, எதிர்வரும் ஜூலை மாதம் இந்தியக் கிரிக்கெட் அணி, இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

எனினும், இந்தியக் கிரிக்கெட் அணியின் இரண்டாம் நிலை அணியே இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் என இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

இதில் அணித்தலைவர் விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா, பும்ரா உள்ளிட்ட முன்னணி வீரர்கள், இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை அணிக்கெதிரான மட்டுப்படுத்தப்பட்ட தொடரிலிருந்து விலகியுள்ளனர்.

ஷிகர் தவான், பிருத்வி ஷா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹார்திக் பாண்ட்யா, கிருனல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், நவ்தீப் சைனி, கலீல் அகமது, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் போன்ற வீரர்கள் இலங்கை அணிக்கெதிரான மட்டுப்படுத்தப்பட்ட தொடரில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் இந்த அணிக்கு ராகுல் டிராவிட் மற்றும் அவரது ஊழியர்கள் குழு பயிற்சியாளர்களாக செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூலை மாதம் இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையாடவுள்ளது.