ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆரம்பத் தீர்மானத்தில் தமிழ் அல்லது தமிழர்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படாமை ஏமாற்றமளிக்கிறது.

21.02.2021 09:54:18

 

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆரம்பத் தீர்மானத்தில் தமிழ் அல்லது தமிழர்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படாமை வருத்தமளிப்பதாக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில், கடந்த ஆயிரத்து 465 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், இன்று (ஞாயிற்றுக்கிழமை) குறித்த இடத்தில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்ததுடன் இதன்போது, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் குறிப்பிடுகையில், “பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான அமைதியான ஆர்ப்பாட்டத்தை கொழும்பு சார்ந்த செய்தி ஊடகங்கள் இருட்டடிப்பு செய்ததற்காக கண்டனம் தெரிவித்த அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸிற்கு நன்றிகூற விரும்புகிறோம். இது எங்கள் அமைதியான மற்றும் ஜனநாயக ஆர்ப்பாட்டத்தையும் போராட்டங்களையும் தொடர்வதற்கு ஊக்குவிக்கிறது.

சர்வதேச பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீன பொறிமுறை ஆகியவற்றை உள்ளடக்கிய எங்கள் பரிந்துரைக்கப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் சபை தீர்மானத்தின் கடிதத்திற்கு பதிலளித்த நாடுகளுக்கும், குறிப்பாக கனடா மற்றும் அவுஸ்ரேலியாவிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.

ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்வுக்கு முன்னதாக ஒரு அரசியல் தீர்வு குறித்து சிங்கள அரசாங்கத்துடன் பேசிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கிறோம். இது தமிழர்கள், சிங்களவர்களுடன் இணைந்து பணியாற்றலாம் என்பதை உலகிற்குக் காட்டுகிறது. அத்துடன், தமிழர்களுக்கு அமெரிக்கா அல்லது இந்தியத் தலையீடுகள் தேவையில்லை என்பதையும் வலியுறுத்துகிறது.

இலங்கைக்கு எதிரான எந்தவொரு வலுவான தீர்மானத்தையும் நீக்குவதற்கான ஒரு பொறியே இதுவாகும். சுமந்திரன் எப்போதுமே, அமெரிக்கா அல்லது இந்தியாவின் தலையீட்டில் தமிழர்கள் ஆர்வம் காட்டவில்லை என்பதை மறைமுகமாக உலகுக்குக் காட்டும் முயற்சியையே முன்னெடுக்கிறார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆரம்பத் தீர்மானம் சர்வதேச நீதிமன்ற விசாரணை மற்றும் பொதுஜன வாக்கெடுப்பின் தேவையை நிவர்த்தி செய்யவில்லை என்பதில் நாங்கள் வருத்தப்படுகிறோம்.

அவர்களின் தீர்மானத்தில், தமிழ் அல்லது தமிழர்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்தத் தீர்மானம் தமிழர்களை சங்கடப்படுத்துவதுடன், இது பாதிக்கப்பட்டவர்களுக்கும் இறந்தவர்களுக்கும் எந்த மரியாதையும் கொடுக்கவில்லை.

முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தனது நினைவுக் குறிப்பில் ஐ.நா. எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க இயலாது என்று எழுதினார். ஐ.நா.வின் முன்னாள் உதவிப் பொதுச்செயலாளர் சார்ள்ஸ் பெட்ரியும் இலங்கையைத் தண்டிக்க ஐ.நா.வுக்கு தைரியம் இல்லை என்று அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில், ஆயிரத்து 465 நாட்களுக்கும் மேலாக தமிழர்களுக்கும், எமது தமிழ் அரசியல்வாதிகளுக்கும் நாங்கள் சொல்லிக்கொண்டிருக்கும் விடயம் இதுவே,

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவை அரசியல் தீர்வுக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் தமிழர்களுக்கு உதவுவதற்குத் தலையிடுமாறு அழைப்பு விடுத்து வருகிறோம்.

ஐக்கிய நாடுகள் போஸ்னியா விடயத்தில் அக்கறை கொள்ளாததால், அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் தலையிட்டு போஸ்னியரை இன அழிப்பிலிருந்து காப்பாற்றி, அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் போஸ்னியர்களுக்காக ஒரு சுயராச்சியத்தை உருவாக்க உதவியது” என்பதை சுட்டிக்காட்டியுள்ளனர்.