இலங்கை உள்ளிட்ட 11 நாடுகளுக்கு எல்லைக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது ஜப்பான்!

14.01.2021 10:22:20

 

கொரோனா தொற்று காரணமாக ஜப்பானிய அரசாங்கம் இன்று(வியாழக்கிழமை) முதல் அதன் எல்லைக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது.

இதற்கமைய இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளிலிருந்தும் பயணிகள் நுழைவதை தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா அறிவித்துள்ளார்.

கொரோனா நிலைமையைச் சமாளிக்க விதிக்கப்பட்ட டோக்கியோவுக்கான ஒரு மாத கால அவசரகால நிலை நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

அத்துடன் ஜப்பான் தனது எல்லைகளை இன்று முதல் எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டுப்பாடுகளில் தாய்வான், ஹொங் கொங், மியன்மார், தாய்லாந்து, கம்போடியா, சிங்கப்பூர், இலங்கை, மலேசியா, வியட்நாம், சீனா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளிலிருந்து ஜப்பானுக்கு நுழையும் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.

இந்த 11 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த வணிகப் பயணிகளுக்கு டிசம்பர் 28 முதல் ஜனவரி 31 வரை ஜப்பான் விதித்த நுழைவுத் தடையில் இருந்து விலக்கு பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.