நான் இருக்கும் வரை தயவு தாட்சண்யம் காட்டவேண்டாம் - அமைச்சர் டக்ளஸ் விடுத்துள்ள உத்தரவு

26.01.2021 10:00:00

பூநகரி கடல் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து வகையான சட்டவிரோத கடற்றொழில் முறைகளும் நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தான் கடற்றொழில் அமைச்சராக இருக்கும் வரை எக்காரணத்திற்காகவும் தயவுதாட்சண்யம் காண்பிக்கக் கூடாது எனவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பூநகரி பிரதேச செயலகத்தில் இன்று(26.01.2021) நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் முன்னாயத்தக் கூட்டத்திலேயே குறித்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பூநகரி பிரதேச கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகள், மன்னார் போன்ற வெளி மாவட்டங்களில் இருந்து தினம்தோறும் தமது கடல் பிரதேசத்திற்கு வருகை தருகின்ற சுமார் எண்பதுக்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகள் சட்ட விரோதமான மீன்பிடித் தொழிலி்ல் ஈடுபடுவதாகவும், இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வெளி மாவட்டங்களுக்கான அனுமதிகளைக் கொண்டிருப்போர் பூநகரி கடல் பிரதேசத்தில் தொழிலில் ஈடுபடுவது தொடர்பாக தொடர்ச்சியான முறைப்பாடு கிடைத்து வருவதாகவும், அதேபோன்று, பூநகரி பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற தடை செய்யப்பட்ட தொழிற் செயற்பாடுகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் குறித்த சட்ட விரோத செயற்பாடுகளை நிறுத்துவதற்கு கடற்றொழில் திணைக்களம், கடற்படை, பொலிஸார் ஆகிய தரப்புக்கள் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

குறித்த ஒருங்கிணைப்பு முன்னாயத்தக் கூட்டத்தில் பூநகரி பிரதேச செயலாளர் மற்றும் திணைக்களங்களின் அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினர் ஆகியோர் கலந்து கொண்டிருந்த நிலையில் கட்றொழில் மற்றும் நீர் வேளாண்மை, கல்வி, சுகாதாரம், விவசாயம் உட்பட பல்வேறு துறைகளில் பிரதேசத்தில் காணப்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.