தமிழர்களின் விடுதலை விவகாரம் - நாமலின் கருத்துக்கு கூட்டமைப்பு வரவேற்பு

23.06.2021 09:08:37

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற நாமல் ராஜபக்சவின் கருத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வரவேற்பதாக கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் சபையில் தெரிவித்துள்ளார்.

10 - 15 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட தமிழ் இளைஞர்களை விடுவிப்பதற்கான ஒரு பொறிமுறையை அரசு செயற்படுத்த வேண்டும் என்று இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச நேற்று சபையில் வைத்து தெரிவித்திருந்தார்.

இதன் பின்னர் உரையாற்றும் போதே சுமந்திரன் அவரது கருத்தை வரவேற்பதாக கூறினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பான நிலைப்பாட்டை ஆவணப்படுத்துகின்றேன்.

அமைச்சர் நாமல் ராஜபக்சவின் கருத்தை வரவேற்கின்றோம். இந்த விடயத்தில் அரசியல் வேறுபாடு இன்றி எமது ஆதரவு உண்டு.

மேலதிகமாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி அண்மையில் சமூக ஊடகப் பதிவுகளுக்காக இந்தச் சட்டத்தில் கைது செய்தவர்களையும் விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.