எனது வலைகளை அறுத்து இந்திய மீனவர்கள் அட்டூழியம் செய்தனர் : பருத்தித்துறை மீனவர் விசனம்

21.01.2021 09:05:36

யாழ்.வடமராட்சிக் கடற்பரப்பில் அத்துமீறி தொழில் ஈடுபட்டுள்ள இந்திய மீனவர்கள், பருத்தித்துறை மீனவரின் வலைகளை அறுத்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ள சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

நேற்று அதிகாலை(20) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மீனவரான சுப்பர்மடம் மீனவர் சங்கத் தலைவர் தே.தேவதாசன் தெரிவிக்கையில், “பருத்தித்துறை சுப்பர்மடம் இறங்குதுறையிலிருந்து 15 கிலோ மீற்றர் தொலைவில் தொழிலுக்காக இன்று(புதன்கிழமை) அதிகாலை படகில் சென்றேன்.
அங்கு இந்திய மீனவர்களின் 4 படகுகள் தொழிலில் ஈடுபட்டிருந்ததுடன், எனது 20 வலைகளை அவர்கள் அறுத்தெடுத்திருந்தனர்.

வலைகளைத் தருமாறு கேட்டேன். இந்திய மீனவர்கள் கற்களால் எனது படகை நோக்கி எறிந்தனர். தமக்கு அருகே வந்தால் தாக்குதல் நடத்துவோம் என்றும் அவர்கள் மிரட்டினார்கள்.

மேலும், அவர்கள் முகத்தை தெரியாதவாறு துணி கட்டியிருந்ததுடன், கொட்டன்களை வைத்திருந்தனர். பல மணி நேரம் வலைகளைக் கேட்டு காத்திருந்துவிட்டு, ஏமாற்றத்துடன் கரை திரும்பியுள்ளேன். இதனால் சுமார் 3 இலட்சம் ரூபா வலைகளை இழந்துள்ளேன்” என கவலை வெளியிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மீனவர், பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.