கொரோனாவால் சென்னையில் பரிதாபமாக உயிரிழந்த யாழ் குடும்பஸ்தர்

02.06.2021 09:11:25

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொரொனாத் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சென்னையில் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், இலங்கையில் நிலவிய போர்கால நெருக்கடிகள் காரணமாக குடும்பத்துடன் புலம்பெயர்ந்து தமிழ்நாட்டில் அகதிகளாக தஞ்சமடைந்த இவர்கள் இராமேஸ்வரம் அகதிகள் முகாமில் வசித்து வந்திருந்தனர்.

பின்னர் முகாமைவிட்டு வெளியேறி சென்னையில் குடியேறி தனியார் துறையில் தொழில் புரிந்து வந்துள்ளார். தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வந்த காரணத்தினால் குடும்பத்தில் ஏனையவர்கள் சொந்த ஊர் திரும்பிய போதிலும் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்னையிலேயே தங்கியிருந்துள்ளார.

இருந்த போதிலும் சொந்த ஊர் திரும்பி கிடைக்கின்ற வேலையை செய்து நிம்மதியாக வாழ வேண்டும் என முடிவு எடுத்த தருணத்தில் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தீவிரம் பெறத் தொடங்கியிருந்தது. இதனால் சென்னையிலேயே தொடர்ந்தும் வாழ வேண்டிய நிலையேற்பட்டது.

இந்நிலையில்தான் கடந்த ஒரு கிழமைக்கு முன்னதாக கொரோன்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து கடந்த ஒரு வாரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் தற்போது காணப்படும் மருத்துவ நிலை நெருக்கடி உள்ளிட்ட காரணங்களினால் சிகிச்சை பலனின்றி இன்று செவ்வாய் கிழமை (ஜூன்-01) காலையில் உயிரிழந்துள்ளார்.