பி.எஸ்.எல்.வி.-சி51 ரொக்கெட் 19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது

28.02.2021 11:06:57

இஸ்ரோ சார்பில் பி.எஸ்.எல்.வி. ரொக்கெட் வரிசையில் 59வது ரொக்கெட்டை, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

கல்விசார் மற்றும் வர்த்தக ரீதியிலான 19 செயற்கைக் கோள்கள் பி.எஸ்.எல்.வி. சி-51 ரொக்கெட்டில் இணைக்கப்பட்டு, ரொக்கெட்டை ஏவுவதற்கான 25 மணி 30 நிமிட கவுன்ட் டவுன் நேற்று காலை 8:54 மணிக்கு ஆரம்பமானது.

சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள முதலாவது ரொக்கெட் ஏவுதளத்தில் நிலை நிறுத்தப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-51 ரொக்கெட் மற்றும் அதில் பொருத்தப்பட்டுள்ள 19 செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளையும் தீவிரமாக கண்காணித்து வந்தனர். தொடர்ந்து கவுண்ட் டவுனை முடித்துக்கொண்டு காலை 10:24 மணிக்கு ரொக்கெட் விண்ணில் சிறிப்பாய்ந்தது.

இது இஸ்ரோவின் வர்த்தகப் பிரிவான நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் (என்எஸ்ஐஎல்) மூலம் வணிகரீதியாக செலுத்தப்பட்ட முதல் ரொக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.

பி.எஸ்.எல்.வி. சி-51 ரொக்கெட்டில் அனுப்பப்பட்டுள்ள செயற்கைக் கோள்களில் முதன்மை செயற்கைக் கோளான அமேசானியா, பிரேசில் நாட்டுக்கு சொந்தமானது. இது 637 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 4 ஆண்டுகள். புவி ஆய்வு, அமேசான் காடுகள் கண்காணிப்பு இதன் முக்கிய பணி ஆகும்.

இதுதவிர, இஸ்ரோவின் சிந்துநேத்ரா, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் சதிஷ் தவான் சாட், உயர்கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்பில் உருவான யுனிட்டிசாட் உள்ளிட்ட 5 செயற்கைக் கோள்கள் மற்றும் அமெரிக்காவுக்குச் சொந்தமான 13 நானோ செயற்கைக் கோள்களும் அனுப்பப்பட்டுள்ளன.

கொரோனா பரவல் காரணமாக, ரொக்கெட் ஏவப்படும் நிகழ்வை ஊடகங்கள், பொதுமக்கள் நேரடியாக பார்வையிட அனுமதி வழங்கப்படலை. பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.