துன்பங்கள் துயரங்கள் வந்தாலும் தமிழர்கள் நம்பிக்கையை இழக்க கூடாது !

14.04.2021 09:55:36

 

எந்தவிதமான துன்பங்கள் துயரங்கள் வந்தாலும் தமிழர்கள் நம்பிக்கையை இழக்க கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மலர்ந்திருக்கும் பிலவ புதுவருடத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

ஜனநாயக வழியில் இறுதிவரை போராடி உரிமைகளை வென்றெடுப்போம் என கூறியுள்ளார். தற்போது அரசாங்கம் செல்லும் பாதை பேராபத்து மிக்கது என்பதனால் இந்த நாடு தற்போதைய பாதையில் தொடர்ந்தும் பயணிக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாட்டில் உண்மையான நல்லிணக்கம் ஏற்படக்கூடிய வகையில் தேசிய பிரச்சினையான அரசியல் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்றும் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதன்படி தமிழர்களுக்கு எதிராக நடந்த அநீதிகளுக்கு இந்த அரசாங்கம் பொறுப்புக்கூறியே ஆகவேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர் அந்த கடமையில் இருந்து அரசு விலக கூடாது என்றும் கூறியுள்ளார்.

உள்நாட்டிலும் சர்வதேசத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் அரசாங்கம் தத்தளித்து வருவதாக குறிப்பிட்ட இரா. சம்பந்தன், இந்த நடவடிக்கை நாட்டுக்கும் மக்களுக்கும் உகந்ததல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

ஒருமித்த நாட்டுக்குள் அதி உச்ச அதிகார பகிர்வினையே தமிழர்கள் அனைவரும் கோருவதாக சுட்டிக்காட்டிய அவர், சுயநிர்ணய அடிப்படையில் தமிழர் பகுதியில் இறைமையை பயன்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.