மூன்று ஆண்டுகள் ஊழல் வழக்கில் சிக்கிய பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறை தண்டனை !

02.03.2021 09:39:30

 

பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நீகோலா சர்கோஸீ மீதான ஊழல் வழக்கில், அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி உட்பட மேலும் இருவரை பணியிடை நீக்கம் செய்யவும் அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய இந்த வழக்கில் சர்கோஸீக்கு எதிராக நீதிபதி கிறிஸ்டைன் மீ அளித்த தீர்ப்பில், ‘தான் தவறு செய்கிறோம் என்பதை கன்சர்வேட்டிவ் அரசியல்வாதி நன்றாகவே அறிந்திருந்தார். அவரது செயற்பாடுகளும் அவரது வழக்கறிஞரின் செயலும் பொதுமக்கள் மத்தியில் நீதித்துறைக்கு களங்கத்தை ஏற்படுத்தி விட்டன’ என கூறியுள்ளார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து சர்கோஸீ சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இந்த மேல்முறையீடு நடைமுறை காரணமாக, அதில் முடிவெடுக்கப்படும்வரை சர்கோஸீ சிறையில் அடைக்கப்படமாட்டார்.

ஒருவேளை சர்கோஸீயின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வராமல் போனால், அவர் சிறையில் அடைக்கப்படுவதற்கு பதிலாக சிறை கைதிகளுக்குரிய மின்னணு டேக் பொருத்தப்பட்ட நிலையில், அவர் வீட்டிலேயே ஓராண்டு சிறையை கழிக்க நேரலாம்.

இந்த வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து, 66 வயதாகும் சர்கோஸீ சிறை தண்டனை பெறும் பிரான்ஸின் முதலாவது முன்னாள் ஜனாதிபதியாகியுள்ளார்.

2014ஆம் ஆண்டில் பிரான்ஸ் ஜனாதிபதி பதவியை நிறைவு செய்த பிறகு, வேறொரு வழக்கின் தகவலுக்கு உபகாரமாக மதிப்புமிகு வேலை கிடைக்க உதவி செய்வதாக ஒரு நீதிபதிக்கு லஞ்ச பேரம் பேசியதாக சர்கோஸீ மீது குற்றம்சாட்டப்பட்டது.

தொழில்முறை இரகசிய காப்பு உறுதிமொழியை மீறி தனது செல்வாக்கை பயன்படுத்தி காரியம் சாதிக்க முற்பட்டது உள்ளிட்ட குற்றங்கள் சர்கோஸீ மீது சுமத்தப்பட்டிருந்தன.

பிரான்ஸ் போருக்குப் பிந்தைய வரலாற்றிலேயே இது மிகவும் சட்டப்பூர்வ திருப்பத்தை தரும் தீர்ப்பாக பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு ஜேக் ஷிர்ராக் என்ற சர்கோஸிக்கு முன்பு ஜனாதிபதியாக இருந்தவருக்கு 2011ஆம் ஆண்டில் இரண்டு ஆண்டுகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

பிரான்ஸின் ஜனாதிபதியாக 2007ஆம் ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு பதவியில் இருந்த நிகோலா சர்கோஸீ, ‘ஆடம்பர ஜனாதிபதி’ என கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.