அரசாங்கத்தின் வர்த்தமானி அறிவிப்புக்கள் அனைத்தும் பயனற்றவை – அனுர

20.01.2021 09:48:26

பொருட்களுக்கான விலை குறித்து வெளியாகும் வர்த்தமானி அறிவிப்புக்கள் அனைத்தும் பயனற்றவை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

சீனி, தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பல பொருட்களின் மீதான இறக்குமதி வரி திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்புகள் தொடர்பாக இன்று (புதன்கிழமை) சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெற்றது.

குறித்த விவாதத்தில் பேசிய அவர், வர்த்தமானிகள் வெளியிடப்படுகின்றதே தவிர அவை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்றும் அச்சிடுவதற்கான செலவினங்களை வீணாகுவதாகவும் அனுரகுமார திசாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் சீனி இறக்குமதி மீதான வரி தளர்த்தப்படுவதால் ஜனவரி 10 ஆம் திகதி வரை 10 பில்லியன் ரூபாய் இழப்பு பதிவாகியுள்ள நிலையில் ஏன் சீனி மீதான வரி குறைக்கப்பட்டடது என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதேவேளை இறக்குமதி தடை செய்யப்பட்டிருப்பதால் கழிப்பறைகள் அல்லது வாகனங்களுக்கான உதிரிபாகங்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் மக்கள் இருப்பதாக அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.