முதல் வெற்றியை உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் பதிவு செய்யப்போவது யார் ?

24.02.2021 09:59:08

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஏற்கனவே இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில், இப்போட்டியில் கட்டாய வெற்றியை நோக்கி இரு அணிகளும் களமிறங்கவுள்ளன.

அத்துடன் மிக முக்கியமாக அதிக பார்வையாளர்கள் நேரில் இரசித்து பார்க்ககூடிய வகையில், உருவாக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் இரு அணிகளும் மோதவுள்ளமை விஷேட அம்சமாகும்.

அஹமதாபாத்தில், சர்தார் பட்டேல் என பெயரிடப்பட்டுள்ள இந்த விளையாட்டு மைதானத்தில், ஒரு இலட்சத்து பத்தாயிரம் பேர் போட்டியை நேரில் கண்டுகளிக்கலாம்.

முதல் முறையாக இம்மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டி, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி என்பதும் மற்றொரு சிறப்பம்சம்.

இப்போட்டியில் இந்தியா அணிக்கு விராட் கோஹ்லியும், இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட்டும் தலைமை தாங்கவுள்ளனர். இப்போட்டி உள்ளூர் நேரப்படி பகல் 2.30மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

முதல் போட்டியே சிறப்பு மிக்க பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறவுள்ளதால், இரசிகர்கள் இப்போட்டியை காண ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.