வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் முன்னிலையில் இந்தியா-மாலத்தீவு இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து

22.02.2021 08:27:31

மாலத்தீவுக்கு ரூ.375 கோடி கடன் வழங்குவதற்கான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது.

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் மாலத்தீவுக்கு சென்றார்.

நேற்று மாலத்தீவு ராணுவ மந்திரி மரியா திதியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து, இந்தியா-மாலத்தீவு இடையே ரூ.375 கோடி மதிப்புள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. மாலத்தீவின் கடலோர காவல்படை திறனை வலுப்படுத்துவதற்காக இத்தொகையை இந்தியா கடனாக வழங்குகிறது.

இந்த சந்திப்பு குறித்து ஜெய்சங்கர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், ‘‘மாலத்தீவு ராணுவ மந்திரியுடனான சந்திப்பு சுமுகமாக அமைந்தது. பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து பயனுள்ள முறையில் கருத்து பரிமாற்றம் செய்தோம். மாலத்தீவின் நம்பகமான கூட்டாளியாக இந்தியா நீடிக்கும். மரியா திதியுடன் துறைமுக திட்ட ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தானது” என்று கூறியுள்ளார்.

மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகமது சோலியை ஜெய்சங்கர் சந்தித்தார். அவரிடம் பிரதமர் மோடியின் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

கொரோனா காலத்திலும், அதற்கு பிறகும் மாலத்தீவின் விரிவான வளர்ச்சி கூட்டாளியாக இந்தியா நீடிக்கும் என்று உறுதி அளித்தார்.