பஞ்சாப் அணியிடம் போராடி வீழ்ந்தது ராஜஸ்தான் அணி !

13.04.2021 11:30:19

ஐ.பி.எல். ரி-20 தொடரின் நான்காவது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 4 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இப்போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 221 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கே.எல். ராகுல் 91 ஓட்டங்களையும் தீபக் ஹூதா 64 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சில், சீட்டன் சக்கரியா 3 விக்கெட்டுகளையும் கிறிஸ் மோறிஸ் 2 விக்கெட்டுகளையும் ரியான் பாரக் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 222 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சஞ்சு சம்சன் 119 ஓட்டங்களையும் பட்லர் மற்றும் ரியான் பராக் ஆகியோர் தலா 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், ஹர்ஸ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும் மொஹமட் ஷமி 2 விக்கெட்டுகளையும் ஜெய் ரிச்சட்சன் மற்றும் ரிலே மெரிடித் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, நடப்பு தொடரில் முதல் சதத்தை பூர்த்தி செய்த சஞ்சு சம்சன் தெரிவுசெய்யப்பட்டார்.

சம்சன் 63 பந்துகளில் 7 சிக்ஸர்கள் 12 பவுண்ரிகள் அடங்களாக 119 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இது அவரது மூன்றாவது ஐ.பி.எல். சதமாகும்.