தடுப்பூசியை அச்சமின்றி பெற்றுக்கொள்ளுமாறு மக்களுக்கு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கோரிக்கை

31.05.2021 12:20:34

யாழ்ப்பாணத்தில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியே வழங்கப்படுகின்றமையினால், மக்கள் அச்சமின்றி தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாமென மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றமை தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது க.மகேசன் மேலும் கூறியுள்ளதாவது, “யாழ்ப்பாணத்தில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு இன்றும் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் சில பகுதிகளில், மக்கள் மிகவும் ஆர்வமாக தடுப்பூசிகளை பெற்று வருகின்றனர்.

எனினும்  சில இடங்களில் மக்கள் தடுப்பூசிகளை பெறுவதில்  ஆர்வம் இல்லாதமையை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

அதாவது இந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்வது குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

இது உலக சுகாதார நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட  தடுப்பூசியாகும். இலங்கையில்  பல இடங்களிலும் இந்த ஊசி பொதுமக்களுக்கு  தற்போது வழங்கப்படுகின்றது.

ஆகவே பொதுமக்கள், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கு முன்வர வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.