சிகிச்சைக்காக இந்தியாவுக்கு மேலும் 1000 வென்டிலேட்டர்கள் விரைவில் அனுப்ப இங்கிலாந்து திட்டம்

04.05.2021 10:47:14

 

கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டு வரும் இந்தியாவுக்கு பல்வேறு வெளிநாடுகள் உதவிகளை குவித்து வருகின்றன.


கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டு வரும் இந்தியாவுக்கு பல்வேறு வெளிநாடுகள் உதவிகளை குவித்து வருகின்றன. அந்தவகையில் கொரோனா சிகிச்சைக்காக 200 வென்டிலேட்டர்கள், 495 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 3 ஆக்சிஜன் உற்பத்தி அலகுகள் என ஏராளமான தளவாடங்களை இங்கிலாந்து அனுப்பி வைத்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக மேலும் 1000 வென்டிலேட்டர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க அந்த நாடு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக தீவிர கொரோனா நோயாளிகளுக்கு உதவுவதற்காக இந்திய ஆஸ்பத்திரிகளுக்கு வழங்கும் வகையில் இந்த வென்டிலேட்டர்கள் அனுப்பப்படும் என இங்கிலாந்து அரசு கூறியுள்ளதாக ஸ்புட்னிக் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இதைப்போல கொரோனா தடுப்பு பணிகளில் இந்திய நிறுவனங்களுக்கு உதவுவதற்காக உயர்மட்ட ஆலோசனைக்குழு ஒன்றும் ஏற்படுத்தப்படும் எனவும், இதில் இந்திய சுகாதாரத்துறையில் அனுபவம் வாய்ந்த ஆய்வாளர்கள், மருத்துவ அதிகாரிகள் உள்ளிட்டோர் இடம்பெறுவர் எனவும் கூறப்பட்டு உள்ளது.