விமான விபத்து- கருப்பு பெட்டிகள் இருக்கும் இடம் தெரிந்தது

11.01.2021 11:39:54

இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டிகளில் இருந்து சிக்னல் கிடைத்துள்ளதால் அவை இருக்கும் இடம் தெரியவந்துள்ளது.

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகர்தாவில் இருந்து சென்ற விமானம் சிறிது நேரத்தில் கடலில் நொறுங்கி விழுந்தது. இதில் 62 பயணிகள் உயிரிழந்தனர்.

அந்த விமனத்தின் பாகங்களை கண்டுபிடிக்கும் பணியும், இறந்தவர்கள் உடல்களை மீட்கும் பணியும் நடந்து வந்தது. இதில் 20 ஹெலிகாப்டர்கள், 100 கப்பல் மற்றும் படகுகள், 2,500 மீட்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

விபத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்கும் முயற்சி நடந்து வருகிறது. விமானத்தில் உள்ள 2 கருப்பு பெட்டிகளில் விமானியின் உரையாடல்கள் மற்றும் விபத்து நடக்கும் போது எழுந்த சத்தம் அனைத்தும் பதிவாகி இருக்கும். அதை மீட்டுவிட்டால் விபத்துக்கான காரணம் தெரிந்து விடும்.

எனவே கருப்பு பெட்டியை தேடும் பணி நடந்து வந்தது. இப்போது கடலில் கருப்பு பெட்டிகள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லாங்கங்-லகி தீவுகளுக்கு இடையே உள்ள பகுதியில் கடலுக்கு அடியே 20 மீட்டர் ஆழத்தில் கருப்பு பெட்டி கிடக்கிறது.

அந்த இடத்தில் தான் விமானத்தின் முன்பாகம் உடைந்து விழுந்துள்ளது. கருப்பு பெட்டிகளில் இருந்து தொடர்ந்து சிக்னல் வந்து கொண்டிருக்கிறது. எனவே அதை மீட்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.