யுத்தக் குற்றச்சாட்டுகள் இடம்பெற்றதாக நிரூபிக்க கோட்டாபயவே வலுவான ஆதாரங்களை முன்வைத்துள்ளார்!

13.01.2021 09:44:02

நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி உறுப்பினரை இலக்கு வைத்து, ஜனாதிபதி வெயியிட்ட அச்சுறுத்தலான கருத்தானது, இலங்கை ஆயுதப்படைகள் மற்றும் தளபதிகள் இழைத்ததாகக் கூறப்படும் யுத்தத் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க கூடிய சாட்சியாக அமைந்துள்ள ஹெல பொது சவிய அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, ஜனாதிபதியின் முழுப்பெயரை சுட்டிக்காட்டி வெளியிட்ட கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் அம்பாறையில் இடம்பெற்ற நிகழ்வில் கோபமாக கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, விடுதலைப்புலிகள் அமைப்பினர், தான் பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் கொழும்ர் பித்தளை சந்தியில் குண்டு வீசியதாகவும், ஆகவே அப்போது பணிகளை ஆரம்பித்த காலத்தில் பதிலளித்த விதத்தில் செயற்படும் திறன் இன்னும் தன்னிடம் காணப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

”எனினும் நான் இறுதியில் பிரபாகரனை நாயைப் போல் இழுத்து வந்தேன். அந்த நிலைக்கு கொண்டு வர முடியும். எதற்கும் தயாராக இருக்கும் ஒரு கதாபாத்திரம் நான்” அவ்வாறு அரசியல்வாதிகளுக்காக தன்னால் இவ்வாறு செயற்பட முடியுமென்ற கோட்டாபய ராஜபக்சவின் கருத்ததானது, நாட்டின் ஜனாதிபதியாக, ‘இல்லாத பிரச்சினைகளை வரவழைப்பது’ போன்றது என ஹெல பொது சவிய அமைப்பின் தலைவர் புதுகல ஜினவன்ச தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதியின் அறிக்கை வெளிநாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டால் ஏற்படக்கூடிய ஆபத்தையும் ஜினவன்ச தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இந்த கருத்து நமது ஆயுதப் படைகளின் தளபதியும், நமது நாட்டின் தளபதியும் போர்க்குற்றங்களைச் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு ஒரு வலுவான சான்றாகும். எங்கள் ஜனாதிபதி ஒரு தகவல் தொழில்நுட்ப பட்டதாரி, இதுபோன்ற விடயங்களை இன்று எந்த மொழியிலும் மொழிபெயர்க்க முடியும் என்பதை அறிவார்.”

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஜனாதிபதியின் உரை முன்வைக்கப்பட்டால் இது இல்லாத பிரச்சினையை தோற்றுவிக்கும் விடயமாக மாறும். தமிழ் புலம்பெயர்ந்தோருக்கு இது மற்றொரு விதை. முப்படையினர் யுத்தக் குற்றங்களை இழைத்தனர் என்பதை நிரூபிப்பதற்கான சாட்சி இது.”

எந்தவொரு விவேகமுள்ள ஆட்சியாளரும் இத்தகைய அறிக்கையை வெளியிடக்கூடாது என்பதை சுட்டிக்காட்டியுள்ள அந்த அமைப்பு, அரச தலைவர், தனக்கு அறிவுரை கூறும் ஆலோசகர்கள், விழாக்களுக்கு உரைகள் எழுதுபவர்களை உடனடியாக நீக்கி, பொருத்தமானவர்களை நியமிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

இல்லையெனில் வாக்களித்த 69 இலட்சம் மக்களும் மேலும் சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்ற எச்சரிக்கையையும், ஜினவன்ச தேரர் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் தமக்கு மரண அச்சுறுத்தல் வந்ததால் தமக்கு போதிய பாதுகாப்பினை வழங்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

“அவர் அவரது கடமைகளை சரியாக தொடர்ந்து சரிவர நிறைவேற்றாத பட்சத்தில் எனது உயிருக்கு என்ன ஆபத்து இருந்தாலும், அவர் விரும்பாவிட்டாலும், உண்மையைத் தொடர்ந்து சொல்வதன் மூலம் எனது கடமையையும் பொறுப்பையும் நிறைவேற்றுவேன்.

எனவே, இந்த விடயத்தை உங்கள் அவசர கவனத்திற்கு நான் கொண்டு வருகின்றேன். பாதுகாப்புப் படைகளின் தளபதியும் பாதுகாப்பு அமைச்சருமான ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ச, முன்வைக்கும் அச்சுறுத்தலின் தீவிர தன்மையைக் கருத்தில் கொண்டு, அவர் எனக்கு தீங்கு விளைவிக்கும் ஆற்றல் இருப்பதாகக் குறிப்பிடும்போது அவரை மேலும் சந்தேகிக்க எனக்கு எந்த காரணமும் இல்லை. ஆனால் முதல் பெயரை குறிப்பிடுவதைக் கேட்டு ஜனாதிபதி குழப்பமடைவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது”

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு சரியாக 12 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தன்னை ஜனாதிபதி அச்சுறுத்தியமை தொடர்பில் ஆச்சரியமடைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர், தமது உயிருக்கு கடுமையான அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் போதிய பாதுகாப்பு வழங்குமாறும் பொலிஸ்மா அதிபரிடம் கோரியுள்ளார்.

“ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரித்த 2.8 மில்லியன் வாக்காளர்கள் சார்பாக சுதந்திரமாக கருத்து வெளியிடுவதற்கான தனது உரிமையை பாதுகாக்குமாறு நான் தயவு செய்து கேட்டுக்கொள்கிறேன்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்த கருத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடுமையாக சாடியுள்ளார்.

ஹரின் பெர்னாண்டோ நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை தொடர்பாக ஜனாதிபதியின் அச்சுறுத்தலான கருத்து ஜனநாயகம் மீதான தாக்குதல் என கூறியுள்ளார்.

ஹரின் பெர்னாண்டோவின் பாதுகாப்பு குறித்து தானும் தமது கட்சியும் முழுமையாக உறுதி பூண்டுள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஏற்படும் எந்தவொரு தீங்கிற்கும் ஜனாதிபதியும் அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும் எனவும், ஜனவரி 10 ஞாயிற்றுக்கிழமை காலை கட்சி ஆதராளர்களுடன் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையில் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

கம்பஹாவில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, தனக்கு இரண்டு கதாபாத்திரங்கள் இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்த விடயமானது, அவரது இரு நிலைகளை குறிப்பதாக தெரிவித்துள்ளார்.

“நான் நந்தசேன கோட்டாபய. இது ஒரு நல்ல பெயர். ஆனால் நந்தசேன கோட்டாபயவுக்கு இரண்டு கதாபாத்திரங்கள் உள்ளன.” என ஜனாதிபதி கூறியிருந்தார்.

தனது முழுப் பெயரால் ஜனாதிபதி மிகவும் கோபப்படுவதை சுட்டிக்காட்டிய அநுர குமார திசாநாயக்க, சமூகத்தை அச்சுறுத்துவதன் மூலம் மேற்கொள்ளப்படும் வன்முறை அரசியல், இலங்கை அரசியலில் இனி செல்லுபடியாகாது என்பதை ஜனாதிபதிக்கு நினைவூட்டுவதாகக் கூறியிருந்தார்.