சென்னை விமான நிலையத்தில் புதிய முனையம் 2022 இறுதிக்குள் ..

14.01.2021 11:00:04

சென்னை விமான நிலையத்தில் புதிய முனையம் 2022-ம் ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் என இந்திய விமான நிலைய ஆணையம் தற்போது அறிவித்துள்ளது.‌

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்களை இணைக்கும் வகையில் புதிய முனையத்தை அமைக்க கடந்த 2018-ம் ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.

சென்னை விமான நிலையத்தில் தற்போது உள்ள 2 மற்றும் 3-வது முனையத்தை இடித்து விட்டு 2 லட்சத்து 18 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் புதிய ஒருங்கிணைந்த முனையம் அமைக்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த புதிய முனையம் 2022-ம் ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் என இந்திய விமான நிலைய ஆணையம் தற்போது அறிவித்துள்ளது.‌ இதுதொடர்பாக அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

புதிய முனையம் அமைக்கும் இந்த திட்டம் 2 கட்டங்களாக செயல்படுத்தப்படும். முதல் கட்டத்தில் ஏற்கனவே இருக்கும் 2-வது முனையத்தை இடித்துவிட்டு அங்கு புதிய முனையத்தை அமைத்து அதை வருகிற ஜூன் மாதத்துக்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

2-வது கட்டத்தில் 3-வது முனையம் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் புதிய முனையம் கட்டப்படும். அதனைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த புதிய முனையம் 2022-ம் ஆண்டு இறுதிக்குள் செயல்பட தொடங்கும்.

இந்த புதிய முனையம் சென்னை விமான நிலையத்தின் தற்போதைய திறனை ஆண்டுக்கு 2 கோடியே 10 லட்சம் பயணிகளிடமிருந்து ஆண்டுக்கு 3 கோடியே 50 லட்சம் பயணிகளாக உயர்த்தும் என இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.