தமிழீழ விடுதலைப்புலிகளின் தடைநீக்க விவகாரம் - நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

19.02.2021 15:47:13

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கம் செய்யும் ஆணையை, உள்துறையமைச்சர் நாடாளுமன்றத்தில் முன்வைப்பது மட்டுமே அடுத்த நடவடிக்கையாக அமையவேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பிரித்தானிய அரசாங்கத்துக்கு 90 நாட்கள் அவகாசமாக வழங்கியுள்ளமையானது சட்ட ஆட்சிக்கும், நீதிக்கும் முரணானது. அத்துடன் இது தொடர்பில் மேன்முறையீட்டு பத்திரங்களை தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கான மேல்முறையீட்டு ஆணையத்திடம் சமர்பித்துள்ளது.

தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கான மேல்முறையீட்டு ஆணையத்திடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடுத்திருந்த சட்டப்போராட்டத்தின் முதல்கள வெற்றியாக, பயங்கரவாத தடைப்பட்டியலில் விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் வைத்திருக்கும் பிரித்தானிய உள்துறையமைச்சரின் செயல் சட்டமுறைமைக்கு முரணானது என ஆணையம் தனது தீர்ப்பில் ஒக்ரோபர் 21-2020 முன்னராக தெரிவித்திருந்தது.

முதல் தீர்ப்பு தொடர்பில் தீர்ப்பு வெளிவந்த அடுத்த 28 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற நிலையில், தமிழீழ விடுதலைப்புலிகளை தடைநீக்கம் செய்யும் ஆணையை, உள்துறையமைச்சர் நாடாளுமன்றத்தில் முன்வைப்பது மட்டுமே உரிய அடுத்த நடவடிக்கையாக அமையவேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது வாதுரையில் தெரிவித்திருந்தது.

தமக்கு 90 நாட்கள் அவகாசம் தருமாறு ஆணையத்திடம் பிரித்தானிய அரச தரப்பு, கோரியிருந்ததோடு, தடை தொடர்பில் தம்மிடம் புதிய ஆதாரங்கள் இருப்பதாக தனது வாதுரையில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் நாடாளுமன்றம் நோக்கிய சட்டமுறைமையை நேற்று வியாழக்கிழமை வெளிவந்த ஆணையத்தின் இரண்டாம் கட்ட தீர்ப்பானது வெட்டிவிட்டதாக கருத வேண்டும். இது நாடாளுமன்றத்தின் இறைமைக்கு முரணாக அமைவதோடு, இது தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்ற விவாதம் ஒன்றினை தொடங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த விவகாரம் தனியே விடுதலைப் புலிகள் மீதான தடையினை நீக்குவதாக மட்டுமல்லாமல், சட்டஆட்சி, நாடாளுமன்ற இறைமை தொடர்பாக இடம்பெற வேண்டும். இந்த விவாகரத்தினை அரசியலாக்கம் செய்வது தொடர்பில் வரும் வாரங்களில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை பிரித்தானிய உள்துறை அமைச்சுக்கு கொடுக்கப்பட்ட 90 நாட்கள் காலத்துக்குள் தமிழீழ விடுதலைப்புலிகள் எந்தவிதான பயங்கரவாத நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்ற வல்லுனர்களின் அறிக்கைளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சமர்பிக்க இருப்பதோடு, உலகத் தமிழர்களின் அரசியல் நிலைப்பாட்டை உள்துறை அமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கின்ற உலகளாவிய செயற்பாடொன்றினை தொடக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.