ஷாயின் அப்ரிடியின் சிறப்பான பந்துவீச்சால் லாகூர் அணி வெற்றி !

01.03.2021 10:34:16

பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடரின், 11ஆவது லீக் போட்டியில் லாகூர் க்யுலெண்டர்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.

கராச்சி மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், லாகூர் க்யுலெண்டர்ஸ் அணியும் கராச்சி கிங்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற லாகூர் க்யுலெண்டர்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கராச்சி கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சர்ஜில்கான் 64 ஓட்டங்களையும் நபி 57 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

லாகூர் க்யுலெண்டர்ஸ் அணியின் பந்துவீச்சில், ஷாயின் அப்ரிடி 3 விக்கெட்டுகளையும் ஹரிஸ் ரவூப், அஹமட் டேனியல், வெயிஸ் மற்றும் சமித் பட்டேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 187 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய லாகூர் க்யுலெண்டர்ஸ் அணி, 19.2 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் அந்த அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பகர் சமான் 83 ஓட்டங்களையும் பென் டன்க் ஆட்டமிழக்காது 57 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

கராச்சி கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், மொஹமட் ஆமிர், வகாஸ் மசூத் மற்றும் டேனில் கிறிஸ்டியன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 4 ஓவர்கள் வீசி 27 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்த ஷாயின் அப்ரிடி தெரிவுசெய்யப்பட்டார்.